என்னை நான் தேடி
என்னுள் அலைந்தாடி
உந்தன் கரம் தேடினேன்
சிந்தை திரியேற்றி
என்னுள் பலச்சாற்றி
உன்னை நான் காண்கிறேன்
காற்றின் கைக்கோர்த்து
நகைத்து விளையாடும்
அலையை நான் காண்கிறேன்
அலையின் நிலைபோல
பொழுதும் அலைமோதும்
நினைவில் ஏன் வாழ்கிறேன்
உயர பறந்தும் - சிரம்
பணிந்து மகிழ்கின்ற
பறவை மனம் கேட்கிறேன்
பிறந்த மனம் தன்னில்
திரியும் பொருள்கண்டு
எரிந்து நான் வேகிறேன்
ஞானம் தனைத்தேடி
கோணம் பலவாக
திரியும் பலமாந்தருள்
தேடி எமைவந்து
கூடி நலங்காக்கும்
குருவையெப் போற்றுவேன்
பொழுதும் பலவாக
விழுந்து தொழுதாலும்
இறையை அறிந்தாரில்லை
அடையும் இடமறியா
அலைந்து திரிவோர்கள்
அறிவில் சிறந்தோரில்லை
வழிவிடும் தோற்றம்
இடைவெளிக் காட்டும்
நிலைதனை மாற்றவே
குவலயம் எங்கும்
நறுமணம் பொங்கும்
நபிபுகழ் பாடுவோம்
இடிவரும் முன்னே
வெளிவரும் மின்னல்
ஒளிதனைப் போலவே
இழிபவர் கூட்டம்
ஒழிவதற்க்(கு) உடன்
கட்டையும் ஏறுவோம்