உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

எவருடைய (நன்மையின்) எடை கனமானதோ அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவருடையின் நன்மையின் எடை இலேசாகி (ப் பாப எடை கனத்து) விட்டதோ அவன் தங்குமிடம் ஹாவியா தான். (30-101-6.7.8)

யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லா மனிதர்களிடமும் ஒரு தராசு இருக்கிறது. அந்த தராசால் மனிதர்கள் தினசரி எடைபோட்டுத் திரிகின்றனர். அந்தத் தராசு மனிதனின் உள்ளம் - அவனது மனம் ! காலையிலிருந்து இரவு வரை மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனையால் எடைப் போட்டு தீர்மானிக்கின்றனர்.

கடையில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியிடம் வந்து ஒருவாரம் லீவு கேட்கிறார். முதாலாளி அப்போது அந்த பணியாளர் இதுவரை நடந்த நடத்தையை எடைபோடுகிறார். ஒருவர் திடிரென நம்மிடம் வந்து ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார் உடனே மனதிற்குள் அவரது நாணயத்தை எடைபோட்டுப் பார்க்கிறோம்.

நம் நண்பரைப் பற்றி ஒருவர் நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறுகிறார் அப்போது சொல்பவரின் வார்த்தையையும் நண்பரின் பழக்க வழக்கங்களையும் எடைபோட்டுப் பார்த்து முடிவுக்கு வருகிறோம்.

இப்படி நம் மனத்தராசில் ஒவ்வொன்றையும் நிறுத்து எடைபார்த்து முடிவு செய்கிறோம்.

புவியிர்ப்பு உலகில் பொருள்களுக்குத்தான் எடையிருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் செயல்களுக்கும் எடையிருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுpலரை வெயிட்பார்ட்டி என்போம் சிலரை இலேசாக க் கருதுவோம். இவையெல்லாம் மனத்தராசின் எடை முடிவுகள் தாம்.

ஆத்தியவாசியமான வேலை முடிந்ததும் அப்பாடா…என அமர்வோம். அதுவரை நாம் மனதிற்குள் சுமந்த பாரம் நீங்கியதற்கான ஆசுவாச வெளிப்பாடுதான் அது.

எனவே மனதிற்குள்ளே பெரும் சுமை – விஷயங்களின் வெயிட்டைப் பொறுத்தது.

சிலர் கண்களாலே எடைபோடுவதும் உண்டு. பார்வையாலே மனிதர்களை அளப்பவர்களும் உண்டு.

நீதி தேவதை கண்களில் கறுப்புத்துணி அணிந்து ஒரு கையில் தராசைப் பிடித்திருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தம்அதிகம் எடைபோடுபவர்கள். அவர்களால் குற்றங்களையும் - நியாயங்களையும் எடைபோட்டுப் பார்க்க முடியும். சில தலைவர்களுக்கு மக்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பது அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகத்தை எடைபோட்டுப் பார்ப்பதால்.

மனிதர்களாகிய நாமே இப்படி எடை பார்க்கும் திறன் உடையவர்களாக இருக்கும் போது. மனிதர்களைப் படைத்த இறைவன் எடை பார்க்காமல் இருப்பானா?

இதைத்தான் நாம் மேலே படித்த திருமறை வசனத்தில் இறைவன் அழகாக விபரிக்கின்றான்.

இந்த உலகில் நாம் செய்த நன்மைகளையும் - தீமைகளையும் மறுமையில் இறைவன் தனது துல்லிதமான தராசில் எடைபோட்டு யாரது தட்டு கனமாக இருக்கிறதோ அவர்களுக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகிறான்.

நன்மை தீமைகளை எடைபோட முடியுமா ? என குதர்க்க வாதம் பேசுபவர்கள் தங்களை தாங்களே உற்றுப் பார்த்தால் …மனிதர்களின் செயல்களை எடைபோடும் மனத்தராசு தங்களிடம் இருப்பதை புரிந்துக் கொண்டால்…

இறைவனின் தராசில் எடை கனமாக இருக்கப்போகும் நற்செயல்களை அதிகம் செய்ய இன்றே முன்வருவார்கள்.

-ஆலிம் புலவர்