மதுக்கூரில் மகத்தான மஜ்லிஸ்

அன்புமிக்க சகோதரர்களே கிளியனூர் இஸ்மத் எழுதுகிறேன். விடுமுறையின் நிமித்தமாக இந்தியா வந்துள்ளேன். நமது ஆருயிர் சங்கைமிக்க வாப்பா நாயகத்தை மதுக்கூரில் வக்கீல் கலீபா லியாகத்அலி அவர்களின் இல்லத்தில் தரிசித்தேன்.

எத்தனை முறைகள் தரிசித்தாலும் மனம் அடையும் ஆனந்தமும், அமைதியையும் என்னால் இங்கு வரிகளாக்க முடியவில்லை. தன்னைத் தேடிவந்த பிள்ளைக்கு அவர்கள் அள்ளித்தரும் அன்பை பருகுவதற்கு நான் திக்குமுக்காடினேன்.

மதுக்கூரின் நூற்றுக்கனக்கான குடும்பங்கள் நம் ஷெய்குநாயகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்பித்து வக்கீல் கலீபா லியாகத்அலி அவர்களின் இல்லத்திற்கு சாரை சாரையாக வருகைப் புரிந்துக் கொண்டிருந்தார்கள்.

வாப்பா நாயகத்தின் உபநியாஷங்களை கேட்பதற்கு அதிகாலை பஜர் தொழுகையை முடித்துவிட்டு பல ஊர்களிலிருந்து முரீதுகளும், நல் அபிமானிகளும் திரளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறை நிறைகளைக் கேட்டு ஆதரவான வார்த்தைகளும், அவர்களுக்காக துவாவும், ஏகமயமாய் பரிபூரண எண்ணத்துடன் வாப்பா நாயகம் செய்கிறார்கள்.

அவர்களை கண்டுச் செல்லும் பக்கதர்களின் முகம் மலர்ந்து செல்வதை என்னால் அங்கு காணமுடிந்தது.

வாப்பா நாயகத்தைக் கண்டு விட்டு உடன் ஊர் திரும்ப இருந்த எண்ணை உங்களுடன் நீண்ட நேரம் பேச முடியவில்லையே என்று அவர்கள் கூறிய அந்த வார்த்தையைக் கேட்டு நான் மாலை வரை தங்கியிருப்பேன் என்றேன்.

மாலை நேரத்தில் எண்ணற்ற பக்தர்களை கண்ட ஆருயிர் நாயகம் அவர்கள் உணவு வேலையின்போது என்னை அருகில் அமரவைத்து உணவு பண்டங்களை அள்ளி அள்ளிவைத்த அந்த தாய்உள்ளத்தை என்ன வார்த்தைகளைக் கொண்டு எழுதுவது என்றே தெரியவில்லை.

இஷா தொழுகைக்குப்பின் பிள்ளைகளுடன் மருத்துவத்தைப் பற்றி உரையாடல் முடியும் நேரம் இரவு பத்து மணியைத் தாண்டியது… நான் ஊர் புறப்படுகிறேன் என்று கூறியபோது இந்நேரத்திலா வேண்டாம் காலையில் செல்லலாம் என்று அன்பு கட்டளை பிறப்பித்தார்கள்.

நான் அந்த இரவு புறப்பட்டிருந்தேன் என்றால் கோடைமழையில் நனைந்து சிரமம்பட்டிருப்பேன். அன்று இரவு தங்கியதால் காலை மஜ்லிஸின் ஞான மழையில் நனைந்து சந்தேகங்களை போக்கிக் கொண்டேன்.

இந்த இனிய நாட்களை என்னால் மறக்க இயலாது அதனால் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்… மிக்க நன்றி.!