உணர்வுகள் மடிவதில்லை…!

அண்ணல் பெருமான்
என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்பேன்?

அஸ்ஸலாமு அலைக்கும்
முகமன் கூறி
ஆரத்தழுவ விரைவேனா?

ஸலவாத்தை என்
நெஞ்சில் நிறைத்து
சத்தத்துடனே ஒலிப்பேனா?

களிப்பின் கடலில்
ஆழ அமிழ்ந்து
கண்ணீர் வழியப் பார்ப்பேனா?

கண்களில் வெளிச்சம்
அதிகம் ஆகி
காணமுடியாமல் அழுவேனா?

வாழ்த்திக் கவிதை
பாட நினைத்தும்
வார்த்தை வராமல் தவிப்பேனா?

வார்த்தைகள் கோடி
வலமாய் வந்தும்
நா எழும்பாமல் திகைப்பேனா?

சிந்தனை இழந்து
செயல்பட மறந்து
சிலையாய் நானும் நிற்பேனா?

கற்பனையே எனக்கு
இப்படி ஆனால்
காட்சி நிகழ்ந்தால் என்னாகும்?

ஒன்றும் புரியவில்லை
எனினும் – என்
உணர்வுகள் மடியவில்லை!

***
நன்றி : இஜட். ஜபருல்லா